சபரிமலை. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களை மகிழ்விக்கவும், அவர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தவும் தினசரி பக்தி இன்னிசை கச்சேரி நடப்பது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக இன்னிசை கச்சேரிகள் நடத்தப்படவில்லை. தற்போது சபரிமலை சன்னிதான அரங்கில் மாலை நேரங்களில் பக்தி இன்னிசை கச்சேரிகள் மீண்டும் துவங்கியுள்ளது. இதனையடுத்து முதற்கட்டமாக சபரிமலை பணியில் இருக்கும் வருவாய் மற்றும் சுகாதாரத்துறையை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்ற பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இந்த கச்சேரியை பார்த்தும், கேட்டும் பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர்.