ஆய்வறிக்கை: ஹெட்போன் மற்றும் அதிக சத்தத்தில் இசை கேட்பதால் 100 கோடி இளைஞர்களுக்கு செவித்திறன் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சவுத் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உட்பட சர்வதேச குழுவினர் ஆய்வு நடத்தி பிஎம்ஜே குளோபல் ஹெல்த் எனும் மருத்துவ இதழில் கட்டுரையாக வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக 12 முதல் 34 வயதுள்ளவர்களிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்காக 19,406 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில் ‘உலகளவில் விரைவில் 100 கோடி இளைஞர்கள், டீன் ஏஜ் பருவத்தினர்களுக்கு ஹெட்போன், இயர்பட் பயன்படுத்துவதால் செவித்திறன் பாதிக்கப்படும். உலக சுகாதார அமைப்பின் தகவலின் படி உலகளவில் தற்போது 43 கோடி இளைஞர்கள் செவித்திறனை இழந்துள்ளனர். இளைஞர்கள் குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தினர் தங்களின் தனிப்பட்ட கேட்கும் கருவிகளான (பிஎல்டி) ஹெட்போன், இயர்பட், ஸ்மார்ட்போன் ஆகியவற்றில் அதிகமான சத்தத்துடன் இசையை கேட்கிறார்கள், படங்கள் பார்க்கிறார்கள். இது அவர்களின் உடலுக்கும் செவிக்கும் ஆபத்து என்பதை ஒவ்வொரு அரசாங்கமும் அறிவுறுத்த வேண்டும் என்றனர்.