வெளிநாட்டு பறவைகள்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உலகப் புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக வேடந்தாங்கல் ஏரி நீர் நிறைந்து காணப்படுகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் முதல் ஜுன் மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து இனப்பெருக்கத்திற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வருவது வழக்கம். அப்படி வரும் பலதரப்பட்ட பறவைகளை காண்பதற்காக வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வேடந்தாங்கல் வருவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வெளிநாடு வாழ் பறவைகள் வர தொடங்கியுள்ளது. பாகிஸ்தான், பர்மா, ஸ்ரீலங்கா, சைபீரியா போன்ற 16 நாடுகளில் இருந்து வெளிர் உடல் அரிவாள் மூக்கன், நத்தக்குத்தி நாரை, சாம்பல் நாரை, கூழை கெடா, கரண்டி வாயன், தட்ட வாயன், பெரிய நீர்காகம் உள்பட 26 வகையான பறவைகள் வந்து செல்லும். தற்போது 15 வகையான பறவைகள் 10 ஆயிரத்திற்கும் மேல் வேடந்தாங்கல் சரணாலயத்தில் குவிந்துள்ளன. பறவைகளை காண்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து பறவைகளை கண்டு களித்து சென்றனர். அடுத்த மாதம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் சரணாலயத்திற்கு வரும் என்று வனத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.