மக்களுக்கான படமாக விடுதலை திரைப்படம் இருக்கும் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவனை அருகில் நடிகர் சூரியின் ஹோட்டல் திறப்பு விழாவிற்கு தமிழக நதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வந்து திறந்து வைத்தார். அவருடன் இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் இந்திராணி, டீன் ரத்தினவேல் மற்றும் நடிகர் சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்தான் மருத்துவமனையில் தனது உணவகம் திறக்கப்பட காரணம் எனக்கூறி அவருக்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர் தனது படங்கள் குறித்து அவர் பேசுகையில், “விடுதலை படம் பெரும்பகுதி நிறைவடைந்து விட்டது. படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும். சமீபத்தில் ரிலீஸான படங்கள் பெற்ற அதே வெற்றியையும், மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் அளிக்கும். இயக்குநர் வெற்றிமாறன் மிகவும் மெனக்கெட்டு உள்ளார். விடுதலை படத்தில் நான் இருப்பதே எனக்கு பெருமையாக உள்ளது. விஜய் சேதுபதியும் படத்தில் இருப்பதால் இதற்கு தனி அந்தஸ்து கிடைத்து விட்டது. இந்தியாவிலேயே முக்கியமான படமாக விடுதலை இருக்கும். மக்களுக்கான படமாகவும், அவர்களை சிந்திக்க வைக்கும் படமாகவும் இருக்கும்” என்றார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘அசுரன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் படத்திற்கு “விடுதலை” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ள நிலையில், விடுதலை படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் மற்றும் திண்டுக்கல் அருகில் சிறுமலை கிராமப் பகுதிகளில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.