நடிகர் சூர்யா: ‘தசாவதாரம்’ படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்து இருந்தார். ‘கோப்ரா’ படத்தில் விக்ரம் 8 தோற்றங்களில் நடித்திருந்தார். இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் சூர்யா அவரது 42 வது படத்தில் 13 வேடங்களில் நடிக்க இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவியுள்ளது. ஆனாலும் படக்குழுவினர் இன்னும் இதனை உறுதிப்படுத்தவில்லை. கதை மற்றும் கதாபாத்திரங்களை ரகசியமாக வைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இது சரித்திர காலத்து கதையம்சம் உள்ள படமாக தயாராவதை உறுதி செய்துள்ளனர். 3டி தொழில் நுட்பத்தில் இப்படத்தை உருவாக்குகிறார்கள்.
இந்த படத்தில் பிரபல இந்தி நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் தயாராகி வருகிறது. தற்போது படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரளாவில் பெருமளவிலான படப்பிடிப்பை நடத்த உள்ளனர். அடுத்ததாக சூர்யா வெற்றிமாறன் இயக்கும் ‘வாடி வாசல்’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே பாலா இயக்கும் ‘வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.