லைலா: நந்தா, பிதாமகன், உன்னை நினைத்து, பார்த்தேன் ரசித்தேன், தில்லு உள்பட பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை லைலா. கடைசியாக 2006ம் ஆண்டு அவர் நடித்ததோடு சினிமாவில் இருந்து விலகிவிட்டார். அதன் பிறகு மெஹதி என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். நடிப்பதையும் நிறுத்திவிட்டார். குடும்பத்தையும், அவரது குழந்தைகளையும் கவனித்துக் கொண்டார். இப்போது அவரது மகன்கள் வளர்ந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு கார்த்தி நடித்த ‘சர்தார்’ படத்தில் நடித்தார்.
அதேபோல் இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி தயாரித்த ‘வதந்தி’ வெப்சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பேன் என்று லைலா தெரிவித்திருந்தார். இதற்காக பட வாய்ப்புகளுக்கும் அவர் வலை வீசி வந்தார். ஈரம், குற்றம் 23, வல்லினம், ஆறாது சினம் போன்ற படங்களை இயக்கியவர் அறிவழகன். இப்போது அவர் ஆதி நடிப்பில் ‘சப்தம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் லட்சுமி மேனன் ஹீரோயினாக நடிக்கிறார். த்ரில்லர் பாணி படமாக உருவாகி வரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க லைலா ஒப்பந்தமாகியுள்ளார். அவர் தொடர்பான காட்சிகளுக்கான படப்பிடிப்பு விரைவில் கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது.