சமந்தா: நடிகை சமந்தா ‘பாணா காத்தாடி’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்னதாக அவர் தெலுங்கில் ‘ஏ மாய சேஷாவே’ எனும் படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கெளதம் வாசுதேவ் மேனன் இப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் பிப்ரவரி 26, 2010ம் ஆண்டு வெளியானது. இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்த படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என தமிழிலும் எடுக்கப்பட்டது.
சமந்தா திரையுலகில் 13 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை ரசிகர்கள் டிவிட்டரில் ஹேஷ்டேக் செய்து கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘உங்களுடைய அன்பை புரிந்து கொள்கிறேன். இதுதான் என்னை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது. இப்போது மட்டுமல்ல எப்போதும் நான் என்னவாக இருக்கிறேனோ அது உங்களால்தான். 13 ஆண்டுகள் ஆகிறது. இது மகிழ்ச்சி தருகிறது’ என பதிவிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் சமந்தா, இந்தியிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நடிப்பில் அடுத்து ‘சாகுந்தலம்’ படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது. விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ என்ற தெலுங்கு படத்திலும் சமந்தா நடித்து வருகிறார்.