அல்லு அர்ஜுன்: தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் மகன்கள் அல்லு அர்ஜுன் மற்றும் அல்லு சிரிஷ். இவர்களில் அல்லு அர்ஜுன் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஸ்டாராக வலம் வருகிறார். ஆனால் அவரது தம்பி அல்லு சிரிஷால் அண்ணனைப் போல் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை. தமிழில் கெளரவம் என்ற திரைப்படத்தில் அல்லு சிரிஷ் ஹீரோவாக நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர் தெலுங்கில் நடித்த பல திரைப்படங்கள் தோல்வியை தழுவின. இந்நிலையில் தமிழில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்திற்கு ‘ஊர்வசிவோ ராட்சசிவோ’ என்று தலைப்பிடப்பட்டு ராகேஷ் சசி இயக்கியுள்ளார். இதில் அல்லு சிரிஷுடன், அனு இம்மானுவேல் ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் வெற்றி விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் அவரது அண்ணன் அல்லு அர்ஜுனும் கலந்து கொண்டார்.
இதில் பேசிய நடிகர் அல்லு சிரிஷ், ‘தொடர் தோல்விகளால் நான் துவண்டு போயிருந்தேன். என் காயத்தில் மேலும் வலியை ஏற்படுத்துவதுபோல சமூக வலைதளங்களில் என்னை ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதனால் நான் மனதளவில் மிகவும் வேதனை அடைந்தேன். நான் உள்ளுக்குள்ளயே அழுது கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் எனக்கு ஆறுதலாக இருந்தது அண்ணன் அல்லு அர்ஜுன் தான்’ என அவர் உருக்கமாக பேசிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த அல்லு அர்ஜுன் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. அடிக்கடி அவர் கண்ணீரை துடைத்தபடி தம்பியின் பேச்சைக் கேட்டு உருகிப்போனார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.