ஆஷா பரேக்: இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. சத்யஜித் ரே, திலீப் குமார், லதா மங்கேஷ்கர், ஷியாம் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட இந்தி திரையுலகினர் பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இருந்து சிவாஜி கணேசன், கே. பாலச்சந்தர், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ஆகிய மூவரும் இந்த விருதினை பெற்றுள்ளார்கள்.
2019 ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது தமிழ் நடிகர் ரஜினி காந்த் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக இந்த விழா நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த விழாவில் ரஜினிக்கு பால்கே விருது வழங்கப்பட்டது.
இப்போது 2020 ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் நேற்று அறிவித்தார். 1960 மற்றும் 70 களில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்தவர் ஆஷா பரேக். இவர் திலீப்குமார், தர்மேந்திரா, தேவ் ஆனந்த், ராஜேஷ் கண்ணா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
குஜராத்தை சேர்ந்த இவருக்கு வயது 79. 1952 முதல் 1999 வரை திரையுலகில் சிறப்பாக பணியாற்றியதற்காக இவருக்கு திரையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. இவர் திரைப்பட இயக்குனராகவும் இருந்துள்ளார். ஏற்கனவே 1992 ம் ஆண்டு ஆஷா பரேக் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.