பாரத் பயோடெக்: சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக அதிகரிப்பதை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள நாசி வழி தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. தற்போது இதன் விலை ஒரு டோஸுக்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.325 எனவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசி ஜனவரி மாதம் 4 வது வாரம் முதல் கோவின் தளத்திலும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த நாசி வழி தடுப்பூசியை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸாகவும் செலுத்திக் கொள்ளலாம். INCOVAAC தடுப்பூசிதான் உலகிலேயே முதல் நாசி வழி தடுப்பூசியாகும். கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களும் மூக்கு தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக எடுத்துக் கொள்ளலாம். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.