தீவுத்திடல்: சென்னை தீவுத்திடலில் வரும் 30ம் தேதி மாலை பிராம்மாண்ட பொருட்காட்சி தொடங்க உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 8 லட்சம் சதுர பரப்பளவில் பொருட்காட்சி அமைக்கப்படுகிறது. 49 அரசுத் துறை அரங்கம், 69 உணவு கடைகள், 290 இதர கடைகள் உள்பட இந்திய அளவில் உள்ள பொருள்கள் விற்பனை செய்யப்படும் வகையில் கடைகள் அமைக்கப்படுகிறது. பொழுதுபோக்கு கண்காட்சியில் 32 ராட்டினங்கள் இடம் பெறும். அத்துடன் துபாய் சிட்டி, லண்டனில் உள்ள பாலங்கள் மாதிரிகள் இதுவரை இல்லாத மாதிரியான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
பொருட்காட்சி மையத்தில் காவல்துறை பாதுகாப்பு, தீயணைப்புத்துறை பாதுகாப்பு, ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவர் வசதி இருக்கும். 40 கழிப்பிடமும் அமைக்கப்படுகிறது. 5 இடங்களில் வாகன நிறுத்தும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த கால பொருட்காட்சியை விட இந்த வருடம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படுகிறது. மாமல்லபுரம் கோயில், முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி, அரசின் சிறப்பை விளக்கி முகப்பு வளைவுகள் இருக்கும்.
20 லட்சம் பேர் வரை பொருட்காட்சிக்கு வர வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரியவர்களுக்கு ரூ.40, சிறியவர்களுக்கு ரூ.25, நுழைவுக்கட்டணம் மற்றும் 16 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் மாணவர்களுக்கு ரூ.25 கட்டணம் என்று நிர்ணயிக்க்பபட்டுள்ளது. பொங்கல் வரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். விடுமுறை நாட்களில் இதே முறையில் செயல்படும். மற்ற நாட்களில் பிற்பகல் 3 மணி முதல் 10 மணி வரை பொருட்காட்சி திறந்திருக்கும்.