சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவின் தேரோட்டம் நடைபெற்றது வெகு விமர்சையாக பக்தர்கள் மத்தியில் நடைப்பெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆனி திருமஞ்சன விழாவின் முக்கிய நிகழ்வான நடராஜ பெருமானின் தேரோட்டம் இன்று காலை தொடங்கி சிறப்பாக நடைப்பெற்றது. தேரினை பக்தர்கள் புடை சூழ ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய என்ற ஓசையுடன் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 27 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆனி திருமஞ்சன விழாவானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
இத்தலம் சமயக் குரவர்களான அப்பர, சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்களால் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. நடராஜர் கனகசபை நாதராக காட்சி தருகிறார். நடராஜருக்கு மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியும், ஆனி மாதத்தில் நடக்கும் ஆனி திருமஞ்சனமும் வெகு சிறப்பாக நடைபெறும் விழாவாகும்.

இவ்விரு விழாவின் போது நடராஜ பெருமானும் சிவகாம சுந்தரியும் நான்கு மாட வீதிகளிலும் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிப்பார். ஆனி திருமஞ்சனம் ஸ்ரீநடராஜருக்கு உரிய அற்புதமான நாள். திருமஞ்சனம் என்றால் மங்கள ஸ்னானம். அதாவது மங்கள நீராட்டு. சிவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் திருமஞ்சனம் என்றே அழைக்கப்படுகிறது.
சிவனாரின் அனைத்துத் தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம், முக்கியமான வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க இவ்விழா நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. நடராஜர் ஆலயத்தில் நிகழும் ஆனி திருமஞ்சனம் நிகழ்வையும் தேரோட்டத்தையும் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்துள்ளனர்.
ஆனி திருமஞ்சன விழா நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகா அபிஷேகம் நடைபெறும்.
அதைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும், 2 மணிக்கு ஆனி திருமஞ்சன தரிசனமும் நடைபெற உள்ளது.