மதுரையைச் சேர்ந்த கவிஞரும், இயக்குநருமான லீனா மணிமேகலை, ஆவணப்படங்களை தயாரித்துள்ளார். கனடாவில் உள்ள யார்க் பல்கலைக் கழகத்தில் முதுநிலை கவின்கலை படித்துவரும் அவர், கனடாவின் தாளங்கள் என்ற திட்டத்தின்கீழ், காளி குறித்த ஆவணப் படத்தை தயாரித்துள்ளார்.
இது ஆகா கான் அருங்காட்சியகத்தில் வெளியிடப்பட உள்ள நிலையில், இதுகுறித்த போஸ்டரை லீனா வெளியிட்டுள்ளார். அதில், காளி வேடமணிந்த பெண் புகை பிடிப்பது போலவும், கையில் தன்பால் ஈர்ப்பாளர்களின் வானவில் கொடியை ஏந்தியிருப்பது போன்றும் உள்ளது.

இந்த போஸ்டர் குறித்து ட்விட்டரில் விளக்கமளித்துள்ள லீனா மணிமேகலை, ஒரு மாலைப்பொழுதில் கனடாவின் டொரோண்டோ நகரில் காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் காளி ஆவணப்படம். படத்தைப்பார்த்தா “arrest leena manimekalai” hashtag போடாம “love you leena manimekalai” hashtag போடுவாங்க. என்றும் தெரிவித்துள்ளார்.
கவிஞர் லீனா மணிமேகலை தமிழில் பறை, தேவதைகள், பலிபிடம் மற்றும், மாடத்தி, செங்கடல் போன்ற ஆவணப் படங்கள் சர்வதேச கவனத்தை பெற்றுள்ளன. சர்வதேச விழாக்களிலும் இவரது படங்கள் திரையிடப்பட்டுள்ளன. பல்வேறு விருதுகளையும் லீனா மணிமேகலை பெற்றுள்ளார்.
கவிஞர், ஆவணப்பட இயக்குநர், சுயாதீன திரைப்பட இயக்குநர் என பன்முகம் கொண்ட லீனா மணிமேகலை, பாலியல் – சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் ஈழப்போராட்டங்கள் குறித்தும் திரைப்படங்களையும், ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், தான் இயக்கியுள்ள ‘காளி’ என்கிற நிகழ்த்து ஆவணப்படத்தின் (Performance Documentary) ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டரை சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதுதான் தற்போதைய சர்ச்சையின் மையமாக உள்ளது.