கெஜ்ரிவால்: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரின் கைது நடவடிக்கை கவலை அளிப்பதாக கூறிய முதல்வர் கெஜ்ரிவால் நாட்டு நலனுக்காக ஹோலி பண்டிகையன்று நாள் முழுவதும் தியானம் செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி டிவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில்,
‘மக்களுக்கு நல்ல கல்வியும் சுகாதார வசதிகளும் கொடுத்தவர்களை சிறையில் அடைக்கும் பிரதமர் நாட்டை கொள்ளையடிப்பவர்களுக்கு ஆதரவு அளிப்பது மிகவும் கவலை அளிக்கிறது. இதனால் ஹோலி பண்டிகையன்று நாட்டின் நலனுக்காக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 7 மணி நேரம் தொடர் தியானம் செய்ய உள்ளேன். நீங்களும் நாட்டு நலன் பற்றி கவலைப்பட்டால் தியானம் செய்யுங்கள்’ என்று கூறப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று காலை நாட்டு நலனுக்கான தியானத்தை தொடங்கும் முன் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்ற முதல்வர் கெஜ்ரிவால் அஞ்சலி செலுத்தினார். அதன் பின் மாலை 5 மணி வரை மொத்தமாக 7 மணி நேரம் தியானம் இருந்தார்.