தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஓட்ட தடை விதித்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காவலர்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தும் வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர்களை பயன்படுத்தக்கூடாது என்றும் அலுவலக ரீதியாக பயன்படுத்தும் வாகனங்களில் மட்டுமே போலீஸ் என்ற ஸ்டிக்கர் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
2011ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 2012 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அரசாணை ஒன்று வெளியிட்டது. அதில் கருப்பு ஸ்டிக்கர்களை நான்கு சக்கர வாகனங்களின் பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து, கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் சில உத்தரவுகளை பிறப்பித்தது.

இதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்துறை ஆணையர்கள் அனைத்து காவல் ஆணையர்கள், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் பணிபுரியும் காவலர்கள் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் போர்டு அல்லது ஸ்டிக்கர் பயன்படுத்தி வந்தால் உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்துமாறு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.