வாத்தி: தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ படத்தை வெங்கி அத்லூரி இயக்கியுள்ளார். படம் வரும் பிப்ரவரி 17ம் தேதி திரைக்கு வர உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தனுஷ், இயக்குனர் வெங்கி அத்லூரி, ஹீரோயின் சம்யுக்தா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட தனுஷ் ரசிகர்களிடம் பேசியதாவது.
‘இந்த படத்தில் ஒரு வசனம் வரும். படிப்பை பிரசாதம் போல கொடுங்க, 5 ஸ்டார் ஓட்டல் மாதிரி விக்காதீங்க என்று. வாத்தி படம் சொல்லும் கருத்தும் அதுதான். படிப்புதான் எல்லாவற்றுக்கும் முக்கியம். அதை மட்டும் கைவிடாதீர்கள். பள்ளியில் நான் படிக்கும்போது அப்பா ஃபீஸ் கட்டிடுவார் என்ற தைரியத்தில் கவலையின்றி சுற்றி வந்திருக்கிறேன். ஆனால் இப்போது என் பிள்ளைகளை நான் படிக்க வைக்கும்போது தான் எனக்கு அப்பா பட்ட கஷ்டங்கள் புரிகிறது. படிப்புதான் உங்களை உயர்வுக்கு கொண்டு போகும். அதை விட உங்களை பாதுகாக்கும் கேடயம் எதுவும் இல்லை.
தயவு செய்து எனது காரை பின்தொடர்ந்து ரசிகர்கள் வராதீர்கள். உங்களது எதிர்காலத்தை நினைத்து எனக்கு பயமாக இருக்கிறது. நீங்கள் உங்கள் குடும்பத்தை காப்பாற்றி படிப்பிலும், வேலையிலும் கவனம் செலுத்தினால்தான் எனது பயம் நீங்கும்’ என்று அவர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.