தனுஷின் நானே வருவேன் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டார் இயக்குனர் செல்வராகவன்.
நடிகர் தனுஷ் நடிப்பி கடைசியாக வெளிவந்த மூன்று படங்களும் பிளாப் ஆகின. அந்த மூன்று படங்களும் நேரடியாக ஓடிடி-யில் வெளியானவை, அதனால் ஹிட் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார் தனுஷ். அவர் நடித்துள்ள 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அதன்படி வருகிற ஜூலை 22-ந் தேதி, அவர் நடித்துள்ள ஹாலிவுட் படமான தி கிரே மேன் ரிலீசாக உள்ளது.
இதையடுத்து வருகிற ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.

மேலும், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘நானே வருவேன்’. ‘வி கிரியேஷன்’ சார்பாக கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படத்தில் இதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் செல்வராகவன் இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் வருகிறார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
இப்படம் ஆகஸ்ட் 30 ல் வெளியாகிறது. இந்நிலையில் ‘நானே வருவேன்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதோடு தான் டப்பிங் செய்வது போல் புதிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் செல்வராகவன்.