சிங்கம் 4: இயக்குனர் ஹரியின் படங்கள் பெரும்பாலும் ஆக்ஷ்ன், சென்டிமென்ட் கலந்த குடும்ப பின்னணி கொண்ட திரைப்படங்களாகவே இருக்கும். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான தமிழ், சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு உள்ளிட்ட பல படங்கள் வெற்றி பெற்ற நிலையில் தமிழின் முன்னணி ஹீரோவான சூர்யாவுடன் இணைந்து கடந்த 2010ம் ஆண்டு ‘சிங்கம்’ படத்தை இயக்கினார். இதில் அனுஷ்கா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் மீண்டும் ‘சிங்கம் 2’ திரைப்படம் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி அதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து ‘சிங்கம் 3’ வெளியானது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.
இதையடுத்து சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் ‘அருவா’ படம் தயாராக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் படம் ஒத்திவைக்கபட்டது. அதையடுத்து ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் ‘யானை’ படம் வெளியானது. இதனையடுத்து ஹரி தனது அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டதாகவும், அது ‘சிங்கம் 4’ படத்திற்கான கதைதான் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முழுக்கதை தயாரானதும் சூர்யாவிடம் கதை சொல்லப்படும் என்று கூறப்படுகிறது. சூர்யாவும் சிங்கம் 4 படத்தில் நடிப்பதற்காக ஆர்வமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சூர்யா பாலாவின் ‘வணங்கான்’, சிறுத்தை சிவாவின் ‘சூர்யா 42’, வெற்றி மாறனின் ‘வாடி வாசல்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.