திரவுபதி முர்மு: ஜனாதிபதி திரவுபதி முர்மு முதன்முறையாக நேற்று சுகோய் 30 எம்கேஐ ரக போர் விமானத்தில் பறந்து சென்றார். ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏப்ரல் 6 முதல் 9 வரை அசாமில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் முப்படைகளின் தலைமை தளபதியாக விளங்கும் திரவுபதி முர்மு ராணுவ உடையில் நேற்று தேஜ்பூர் விமானப்படை தளத்திலிருந்து சுகோய் 30 எம்கேஐ ரக போர் விமானத்தில் பறந்து சென்றார்.
இதற்கு முன் பிரதீபா பாட்டில், அப்துல் கலாம் ஆகியோர் ஜனாதிபதியாக இருந்த போது போர் விமானத்தில் பறந்துள்ளனர். பிரதிபா பாட்டில் 2009ம் ஆண்டு புனே விமானப்படை தளத்திலிருந்து சுகோய் போர் விமானத்தில் பயணம் செய்தார். போர் விமானத்தில் பயணித்த முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பிரதீபா பாட்டில் பெற்றிருந்தார். தற்போது திரவுபதி முர்மு சுகோய் போர் விமானத்தில் பயணித்த 2வது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார். அவருடன் குரூப் கேப்டன் நவீன் குமார் திவாரி பயணம் செய்தார். சுமார் 25 நிமிடம் அவர் போர் விமானத்தில் பறந்தார். அதன்பின் அவர் கூறுகையில் ‘சிறப்பாக உணர்ந்தேன்’ என்று தெரிவித்தார்.