காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக காசிக்கு தமிழகத்திலிருந்து 216 நபர்களுடன் முதல் ரயிலை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழகத்திற்கும் காசிக்கும் உள்ள தொன்மையை பறைசாற்றும் வகையில் காசியில் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக தமிழக இராமேஸ்வரத்திலிருந்து 216 பயணிகளை கொண்ட ரயில் சேவை நேற்று தொடங்கியது. இவர்கள் முதற்கட்டமாக இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக செல்கின்றனர்.
காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே தொன்மையான நாகரிக பிணைப்பையும் பல நூற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக, ஒருமாத கால ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி, வாரணாசியில் இன்று (நவ.17) தொடங்கி டிச. 16 வரை நடைபெற உள்ளது.

இதன் ஒருபகுதியாக, காசி – தமிழகம் இடையேயான தொடர்புகளை வெளிக்கொணர்வதை நோக்கமாக கொண்டு, சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் சார்பில், அறிஞர்கள் இடையே கல்விசார் பரிமாற்றங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள் இடம்பெற உள்ளன. இரு பிராந்திய மக்களிடையே உறவை ஆழப்படுத்துவது இதன் பரந்த நோக்கமாகும்.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து காசிக்கு 13 ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களில் தமிழகத்தைச் சேர்ந்த 2,592 பிரதிநிதிகள் பயணம் செய்ய உள்ளனர். சென்னை எழம்பூருக்கு ரயில் வந்த போது இதில் பயணிக்கும் பிரதிநிதிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். தொடர்ந்து, ரயிலை கொடியசைத்து அனுப்பி வைத்தார். இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் பங்கேற்றார்.
இந்த நிகழ்வு இன்று தொடங்கிய நிலையில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்து தமிழில் ட்வீட் செய்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், “காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான்.
‘காசி தமிழ் சங்கமம்’ ஆனது இந்த ‘ஒன்றுபட்ட நிலை’யின் புனிதமான மற்றும் வளமான உணர்வை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான ஊடகம். அன்பென்ற உணர்வு இழைகளினால் இந்தியா முழுவதையும் பிணைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பான வரவேற்பு.
பாபா விஸ்வநாதரின் புண்ணிய ஸ்தலத்தில் ‘காசி-தமிழ் சங்கமம்’ விழாவிற்கு வரும் அனைத்து விருந்தினர்களுக்கும்/பிரமுகர்களுக்கும் அன்பான வரவேற்பு. இந்த விழா மரியாதைக்குரிய பிரதமரின் ‘ஏக் பாரத்-ஷ்ரேஷ்டா பாரத்’ உறுதிமொழிக்கு புதிய பரிமாணத்தை சேர்க்கும்.இந்த நிகழ்வு இந்தியாவின் கலாச்சார நாகரிகத்தில் ‘ராம சேது’ போலவே இருக்கும்” இவ்வாறு அவர் தனது ட்வீட் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது போன்ற பல தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.