அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் பயன்பாடு இருக்காது என மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மஹாராஸ்டிரா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தை அமைச்சர் நிதின் கட்காரிக்கு வழங்கி கவுரவித்தது. இதில் கலந்து கொண்டு பேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் பயன்பாடு இருக்காது என தெரிவித்தார்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் நிலையை மாற்றி அமைக்க நல்ல திட்டங்களை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இதன் ஓரு பகுதியாக பெட்ரோல் டீசல் எரிவாயுக்களில் எத்தனால் கலந்து பயன்படுத்தும் திட்டத்தை நவீன திட்டத்தை கூறினார்.

விதர்பா பகுதியில் பயன்படுத்தப்படும் பயோ எத்தனால் மூலம் வாகனத்திற்கான எரிவாயுவை தயாரிக்கலாம். மேலும், ஆழ் கிணறு நீர் மூலம் பசுமை ஹைட்ரஜன் தயாரித்து ஒரு கிலோ ரூ.70க்கு விற்க முடியும். இத்தனை நாள் உணவு தயாரித்து வழங்கி வந்த விவசாயிகள் இனி எரிசக்தியையும் தயாரித்து வழங்கும் காலம் உருவாகியுள்ளது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், நாட்டில் மாற்று எரிசக்திகளின் பயன்பாட்டில் முன்னுதாரணமாக மகாராஷ்டிரா விளங்க வாய்ப்புள்ளது. எத்தனால், மெத்தனால், பயோ-டீசல், பயோ சிஎன்ஜி, கிரீன் ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.115ஆக உள்ள நிலையில், ஒரு லிட்டர் எத்தனாலின் விலை ரூ.64 இருப்பதன் மூலம் பொது மக்களுக்கு எத்தனால் மிக மலிவான எரிசக்தியாக அமையும் எனக் கூறினார்.
அடுத்தாண்டு ஏப்ரல் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டில் 20 சதவீதம் எத்தனால் கலந்து பயன்படுத்தும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் நாட்டின் எரிசக்தி தேவைக்காக வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி சுமை குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.