கோவா: புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவா கடற்கரைக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சுற்றுலா பயணிகள் நீச்சல் அடிக்க தடை செய்யப்பட்ட பகுதிகளிலும், அலை அதிகம் உள்ள இடங்களிலும் நீச்சல் அடிக்கும்போது அலையில் சிக்கி உயிரிழப்பது போன்ற சோகங்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன. மேலும் கூட்ட நெரிசலில் நடக்கும் குற்றசம்பவங்களும் அதிகரித்துள்ளன. இவற்றை கண்காணித்து, கட்டுபடுத்தி தடுக்க கோவா அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் தானியங்கி ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ‘ஆரஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு ரோபோ நீச்சல் அடிக்க தடை செய்யப்பட்ட பகுதிகளில் ரோந்து செல்வதன் மூலம் சுற்றுலா பயணிகளை எச்சரிக்கிறது. இதேபோல் செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் டிரைடன் என்ற கண்காணிப்பு அமைப்பு கடற்கரைகளில் கூட்ட நெரிசலை நிர்வகிப்பதுடன், குற்ற செயல்களை கண்காணிக்கவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.