நான் டாக்டராகி என் போன்ற மாணவர்களுக்கு உதவுவதே என் கனவு என்று மருத்துவ கல்வியில் அரசு பள்ளிக்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற மாணவி தேவதர்ஷினி கூறியுள்ளார்.
நீட் தேர்வு மிக கடினம் அதனால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இது மிக கொடுமையான நிகழ்வாகவும் மாணவர்களின் மனதை நெருடுவதாகவும் உள்ளது. நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் பலர் தன் உயிரை மாய்த்து கொண்டு வரும் வேலையில் ஈரோடை சார்ந்த அரசு பள்ளியில் பயின்ற மாணவி தேவதர்ஷினி நீட் தேர்வில் முதலிடம் பிடித்திருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரியதாக பார்க்கப்படுகின்றது.
ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி அருகில் உள்ள பொம்மன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி கோடீஸ்வரி தம்பதியின் மகள் தான் இந்த தேவதர்ஷினி. இவரது தந்தை வேலுச்சாமி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தான் இறந்தார். இந்நிலையில், அவரது தாய் கோடீஸ்வரி அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வருகின்றார்.

இவர் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2021 ஆம் ஆண்டு 12-ம் வகுப்பு படிப்பை முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதினார். ஆனால் 184 மதிப்பெண்கள் பெற்ற அவர் எதிர்பாராத அளவுக்கு மதிப்பெண்கள் கிடைக்காதால் விரக்தி அடைந்தார்.
அதன் பிறகு தாய் கோடீஸ்வரியின் அறிவுரைப்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோச்சிங் சென்டர் ஒன்றில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றார். அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வு எழுதிய நிலையில் 518 மதிப்பெண்கள் எடுத்து அரசு பள்ளியில் படித்து 7.5% இட ஒதுக்கீடு மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
அந்த மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்ததால் முதன்மை கல்வி அதிகாரி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவியை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்த போது அவர் மருத்துவராகி என் போன்ற மாணவர்களுக்கு உதவுவேன் என்று கூறினார்.