உலக ஜூனியர் பளு தூக்குதலில் (Junior Weightlifting Championships 2022) இந்தியாவிற்கு முதல் தங்கத்தை வென்று ஹர்ஷதா சாதனை படைத்தார். கீரிஸ் நாட்டில் ஹெராகிலியான் நகரில் உலக ஜூனியர் பளு தூக்குதல் போட்டி மே 1 ம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது.
இதில் 45 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ஷரத் ஹர்ஷதா கருட் பங்கேற்றார். அவர் முதலில் நடைபெற்ற ஸ்னாட்ச் பிரிவில் 70 கிலோ எடையை தூக்கியிருந்தார்.
அதன்பின்னர் நடைபெற்ற கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் இவர் 83 கிலோ எடையை தூக்கி அசத்தினார். மொத்தமாக இந்த இரண்டு பிரிவுகளிலும் சேர்ந்து இவர் 153 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார். அத்துடன் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். உலக ஜூனியர் பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார்.

இதற்கு முன்பாக உலக ஜூனியர் பளுத்தூக்குதல் போட்டியில் 2013ஆம் ஆண்டு மீராபாய் சானு வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார். அதன்பின்னர் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் பளுத்தூக்குதல் போட்டியில் அச்சிண்டா செயுலி வெள்ளிப்பதக்கத்தை வென்று இருந்தார். ஆகவே உலக ஜூனியர் பளுத்தூக்குதல் போட்டிகளில் இந்தியாவிற்கு இது முதல் தங்கப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
மே 1ஆம் தேதி முதல் வரும் 11ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உலக ஜூனியர் பளுத்தூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரில் 8 இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் தற்போது ஹர்ஷதா கவுடா 45 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதேபிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான அஞ்சலி பட்டேல் மொத்தமாக 148 கிலோ எடையை தூக்கி 5ஆவது இடத்தை பிடித்தார். மீதமுள்ள 6 இந்தியர்கள் பதக்கம் வெல்வாராகளா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.