மனநல சேவை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் ‘நட்புடன் உங்களோடு மனநல சேவை’ திட்டத்தை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்கள் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் 14416 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு தங்களது மனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று தெரிவித்தார். தமிழகத்தில் சேவை எண்கள் மூலம் தொடர்பு கொண்டு ஏராளமானோர் பயனடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆலோசனை மையமானது அரசின் பிற சேவைகள் துறையுடன் இணைந்து மக்களின் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காணும் வகையில் செயல்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் 104 இலவச சேவை எண் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இது போன்று சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு இலவச சேவை எண்கள் மூலம் ஏராளமான பாெதுமக்கள் பயனடைந்து வருவதாகவும், குறிப்பாக நீட் தேர்வு காலத்தில் மன அழுத்தத்திற்கு உள்ளான இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இச்சேவை எண்களின் மூலம் பயனடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனநல பிரச்சினைக்கான இந்த சேவை எண்ணில் எத்தரப்பு மக்களும் தொடர்பு கொண்டு தங்கள் பிரச்சினைகளை கூறி தீர்வு காணலாம் எனவும் அவர் தெரிவித்தார்.