ஆராத்யா: மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ஒரு வரலாற்று படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் புரமோஷனுக்காக படக்குழு பல்வேறு நகரங்களுக்கும் நேரில் சென்று படத்தை இரசிகர்களிடையே விளம்பரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வை ஐஸ்வர்யா ராய் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, ‘ ஒரு நாள் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு எனது மகள் ஆராத்யா வந்தார். இது பீரியட் கதை கொண்ட படம் என்பதால் அங்கு போடப்பட்டிருந்த செட்டுகள் மற்றும் நான் அணிந்திருந்த உடைகள், அணிகலன்கள் மற்றும் ஆபரணங்களை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டார். பிறகு அவர் செட்டில் நடந்த சென்ற போது அவர் கண்களில் தெரிந்த வியப்பையும் பரவசத்தையும் நான் பெரிதும் இரசித்தேன். இயக்குனர் மணிரத்னம் அவர்கள் மீது ஆராத்யாவுக்கு மரியாதையும், அன்பும் அதிகம் உண்டு.
அன்று செட்டுக்கு வந்த ஆராத்யாவுக்கு ‘ஆக்சன்’ என்று சொல்லும் ஒரு அற்புதமான வாய்ப்பை மணிரத்னம் ஏற்படுத்திக் கொடுத்தார். ஆராத்யாவால் அந்த சந்தோஷத்தை அடக்கவே முடியவில்லை. அதைப் பார்த்த நானும், அபிஷேக் பச்சனும் என்ன சொல்வதென்று தெரியாமல் மிகவும் சந்தோஷப்பட்டோம். மணிரத்னம் இயக்கத்தில் நானும், அபிஷேக் பச்சனும் சில படங்களில் நடித்துள்ளோம். ஆனால் எங்களில் யாருக்கும் இது போல ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்ததில்லை என்று ஆராத்யாவிடம் சொன்னேன். அதைக் கேட்டு ஆராத்யா மிகவும் சந்தோஷப்பட்டு என் வாழ்நாளில் இது போன்ற அனுபவத்தை என்னால் மறக்க முடியாது என்று கூறினார்.
உண்மையிலேயே ஆராத்யா ‘ஆக்சன்’ என்று சொன்ன அந்த தருணத்தை நானும், அபிஷேக் பச்சனும் மறக்க முடியாது. அது ஒரு அபூர்வ தருணம். ஆராத்யா வளர்ந்த பிறகு இந்த அனுபவத்தை என்றென்றும் நினைவில் வைத்திருப்பார்’ என்று ஐஸ்வர்யா மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.