காஜல் அகர்வால்: தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். கடந்த 2020ல் மும்பை தொழிலதிபர் கவுதம் கிட்ச்லு என்பவரை காதல் திருமணம் செய்த அவர் ஒரு ஆண் குழந்தைக்கு அம்மா ஆனார். திருமணத்துக்குப் பிறகு காஜல் அகர்வால் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் திருமணமான நீங்கள் கவர்ச்சியாக நடிப்பீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த காஜல் ‘திருமணத்துக்குப் பிறகு கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று எந்த கட்டுப்பாடும் நான் விதிக்கவில்லை. இந்த விஷயத்தில் நானும் எனது கணவரும் வெளிப்படையாக இருக்கிறோம். காதல் காட்சிகள் என்றால் சக நடிகருடன் இணைந்து நெருக்கமாக நடிக்க வேண்டும். நடிக்க வந்த பின்பு அப்படி எல்லாம் நடிக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது.
திருமண வாழ்க்கை வேறு. செய்யும் தொழில் வேறு. இரண்டையும் தனியாகப் பிரித்து வைத்துக்கொள்வது புத்திசாலித்தனம். இரண்டையும் இணைத்து குழப்பிக் கொள்ளக் கூடாது. கதைக்கு மிகவும் பொருத்தமான காதல் காட்சி என்றால் கவர்ச்சியாக நடிப்பதில் எந்த தவறும் கிடையாது. திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று வதந்தி பரவியது. அதற்கு இப்போது எனது செயல்கள் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறேன்’ என்று அவர் கூறினார்.