திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் உலக பிரசத்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று கார்த்திகை தீப திருவிழா காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேத விற்பனர்கள் வேத மந்திரம் முழங்க 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இன்று அதிகாலை முதல் சுவாமிகளுக்கு அலங்காரங்கள், அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை நடைபெற்றது. இன்று முதல் காலையிலும், இரவிலும் சுவாமிகள் வீதி உலா வரும் பத்து நாள் திருவிழா நடைபெறும். பத்து நாள் முடிவில் அதாவது பத்தாம் நாளான டிசம்பர் 6ம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு கோயிலின் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
ஆண்டு தோறும் இந்த நிகழ்வை காண்பதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் இந்த ஆண்டு உலகின் பல பகுதிகளில் இருந்தும் 30 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.