புண்ணியம் பூங்காவனம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன், நீதிபதி முரளி புருஷோத்தமன் ஆகியோர் வருகை புரிந்தனர். அவர்களும் ஐயப்பன் கோயில் நடைமுறையில் உள்ள கருப்பு வேட்டி, சட்டை அணிந்து வந்திருந்தனர். பின்னர் அவர்கள் சபரிமலை சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு ஐயப்பன் விக்ரகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.
சபரிமலை சன்னிதானத்தில் சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்தும் ‘புண்ணிய பூங்காவனம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டப்படி கோயில் சுற்றுவட்டாரத்தில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு தூய்மைபடுத்தப்படும். ஐயப்பன் தரிசனத்தை தொடர்ந்து நீதியரசர் தேவன் ராமச்சந்திரன் ‘புண்ணிய பூங்காவனம்’ திட்டப்படி குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றும் தூய்மைப்படுத்தும் பணியில் கலந்து கொண்டார்.
சன்னிதானத்தில் உள்ள புண்ணியம் பூங்காவனம் அலுவலகம் முன் நடந்த நிகழ்வில் நீதியரசருடன் தனி அலுவலர் ஆனந்த், உதவித் தனி அலுவர் நிதின்ராஜ், புண்ணியம் பூங்காவனம் கோட்ட அலுவலர் சுமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதை தொடர்ந்து தேவன் ராமச்சந்திரன் சபரிமலையின் வருகை பதிவேட்டில் கையெழுத்து இட்டு தனது கருத்துக்களை பதிவு செய்தார். அவருக்கு புண்ணியம் பூங்காவனம் திட்ட விளக்க கையேடு வழங்கப்பட்டது.