பிரணவ்: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகன் நடிகர் பிரணவ். இவர் மலையாளத்தில் சில படங்களில் ஹீரோவாக நடித்தார். கடைசியாக அவர் நடித்த ‘ஹிருதயம்’ படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து பிரணவ்க்கு பல திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்த போதும் அவர் அதை ஏற்காமல் கேரளாவை விட்டு புறப்பட்டு விட்டார். அவர் பல்வேறு மாநிலங்கள், நாடுகள் என தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார். ரஷ்யாவுக்கு சென்ற பிரணவ் மாஸ்கோவிலிருந்து பல நூறு கிலோ மீட்டர் தூரம் நடந்தே மற்றொரு நகரத்துக்கு சென்றுள்ளார். அங்கு கிடைக்கும் இடங்களிலெல்லாம் தூங்கி கொண்டிருந்தார்.
இப்போது தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் பிரணவ். அதில் செங்குத்தான பாறை மீது ரிஸ்க் எடுத்து ஏறுகிறார். மலையிலிருந்து நீரில் குதிக்கிறார். குயவர்களிடம் மண்பாண்டம் செய்ய கற்றுக் கொள்கிறார். காட்டுப் பகுதிகளில் தனியாக பயணிக்கிறார். இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
பிரணவின் நெருங்கிய நண்பர்கள் கூறும்போது, ‘பணத்தின் பின்னால் செல்லும் ஆசை பிரணவ்வுக்கு சுத்தமாக கிடையாது. முடிந்தவரை தனது வாழ்க்கையை தனது விருப்பப்படி வாழ வேண்டும் என நினைக்கிறார். மனதுக்கு சந்தோஷம் தரும் எந்த செயலும் செய்ய தயாராக இருக்கிறார். அதனால்தான் இந்த பயணம்’ என கூறியுள்ளனர்.