பிரதீப் ரங்கநாதன்: ஜெயம் ரவியின் ‘கோமாளி’ வெற்றி படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிகராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘லவ் டுடே’. இப்படம் கடந்த நவம்பர் 4ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக 2கே கிட்ஸ் ரசிகர்களிடையே ‘லவ் டுடே’ திரைப்படம் பாசிடிவ் கருத்துக்களை பெற்று வருகிறது. திரையரங்குகளில் வெளியான இப்படம் முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக முதல் நாளிலேயே 6கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. அதே நாளில் வெளியான சுந்தர்.சியின் ‘காபி வித் காதல்’ மற்றும் அசோக் செல்வனின் ‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படங்களை விட இப்படத்திற்கு நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்துள்ளது. இப்படம் வெளியான 8 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
மேலும் இப்படத்தைப் பார்த்த தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதீ்ப் ரங்கநாதன் கூறியுள்ளதாவது, ‘இதற்கு மேல் நான் என்ன கேட்க போகிறேன். சூரியனுக்கு அருகில் நிற்பது போல் அவ்வளவு இதமாக இருந்தது. அந்த இறுக்கமான அணைப்பு, கண்கள், அந்த சிரிப்பு, அந்த ஸ்டைல் மற்றும் அன்பு. என்ன ஒரு ஆச்சரியமான மனிதர். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் என்னுடைய படத்தைப் பார்த்து பாராட்டினார். நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் எப்போதும் மறக்கமாட்டேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.