மெரினா கடற்கரை: சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக விவேகானந்தர் இல்லம் எதிரே 1.14 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட மரப்பாதை மாண்டஸ் புயலால் சேதமடைந்துள்ளது. 380 மீட்டர் நீளத்தில் 3 மீட்டர் அகலத்தில் பிரேசில் தேக்கு, வேல மரம் ஆகியவற்றால் அமைக்கப்பட்ட இந்த மரப்பாதை கடந்த நவம்பர் 27ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என். நேரு, மா.சுப்ரமணியம், சேப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்ட இப்பாலத்தை நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் கடந்த 13 நாட்களில் பயன்படுத்தி உள்ளம் மகிழ்ந்தனர். சமூக வலைதளம் முழுக்க மக்கள் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்த மரப்பாதை கடந்த 2 நாட்களில் கடல் சீற்றத்தால் சேதமடைந்துள்ளது.
அலைகள் மோதும் கடைசி பாலப்பகுதிகள் சேதமடைந்திருந்தாலும் பாலத்தின் மற்ற பகுதிகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பாதையை பார்வையிட்டி ஆய்வு செய்து சேதம் குறித்து மண்டல மாநகராட்சி அதிகாரிகள் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர். எனவே மழை நின்ற ஓரிரு நாட்களுக்குள் இப்பாலம் உடனடியாக சீரமைத்து பழைய நிலைக்கு கொண்டு வரப்படும் என மாநகராட்சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.