COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்’ என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44 வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் & வெள்ளத் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்திருந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 17ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் கூட்டம் நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.

சமீப காலமாக இந்தியாவில் பல பகுதிகளில் கோவிட் 19 தொற்று அதிகரிக்க தொடங்கியது. தற்போது தமிழ்நாட்டிலும் தினசரி பெருகி கொண்டே உள்ளது. இச்சூழலில் தமிழக முதல்வருக்கு கோவிட் 19 இன்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா மீண்டும் புதிய வீரியத்துடன் வந்துள்ளதாகவே தெரிகிறது. மக்கள் மிகுந்த கவனத்துடனும் தனிநபர் இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிதல் என தகுந்த முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.