மு.க.ஸ்டாலின்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக நிர்வாகி அய்யராசு இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். அந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது\
நான் பொறுப்பேற்று பணியாற்றும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சிதான். நான் திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றதும் கொரோனா தொற்று பிரச்சினை இருந்தது. அதனை நாங்கள் எதிர்கொண்டோம். அந்த சமயத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக, சுகாதாரத்துறை அமைச்சர் மட்டுமல்லாமல் நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் சுகாதாரத்துறை அமைச்சர்களாக செயல்பட்டு கொரோனாவுடம் போராடி வெற்றி கண்டோம்.
அதன் பிறகு பெரு வெள்ளம் ஏற்பட்டது. அதனையும் நாங்கள் எதிர்கொண்டோம். அதைத்தொடர்ந்து தற்போது மாண்டஸ் புயல். இந்த புயலை சந்திக்கும் திறமையும் திராவிட மாடல் ஆட்சிக்கு வந்துள்ளது. அதற்கு காரணம் கலைஞர் கருணாநிதி அவர்கள் சொல்லிக்கொடுத்த உழைப்புதான். இந்த புயலை நாங்கள் சிறப்பாக கையாண்டதாக கடந்த இரண்டு நாட்களாக பார்ப்பவர்கள் எல்லோரும் கூறுகிறார்கள். போனிலும் தொடர்பு கொண்டு வாழ்த்துகிறார்கள். சமூக வலைதளங்களிலும் இது பற்றி தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
என்னை நம்பர் ஒன் முதல்வர் என்று கூறுகிறார்கள். எனக்கு நம்பர் ஒன் முதல்வர் என்பதில் பெருமை இல்லை. நம்பர் ஒன் தமிழ்நாடு என்று வர வேண்டும். அதுதான் எனக்கு பெருமை. அதையும் நான் சாதித்து காட்டுவேன். ஏனென்றால் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று முதல்வர் பேசினார்.