பிரணவ் மோகன்லால்: மோகன்லாலின் மகனும் நடிகருமான பிரணவ் ஐரோப்பாவில் 800 கிமீ நடந்தே ஒரு நாட்டுக்கு சென்றிருக்கிறார். மோகன்லாலின் மகன் பிரணவ் மலையாள படங்களில் நடிக்கிறார். கடைசியாக ஹிருதயம் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் விமர்சகர்கள், ரசிகர்களால் பாராட்டுக்குள்ளானது. இந்நிலையில் அடுத்தடுத்து புது பட வாய்ப்புகள் வந்தும் அதை ஏற்காமல் நடிக்க மறுத்திருக்கிறார் பிரணவ். காரணம் அவர் தியானத்தில் ஈடுபடுவதற்காக தனிமையை நாடி ஏதாவது ஒரு ஊருக்கு சென்றுவிடுவார்.
அதுபோல் இமயமலைக்கு சென்று வந்தவர், பிறகு கேரளாவிலுள்ள காட்டுபகுதிகளுக்கும் சென்று வந்தார். இப்போது தியான யாத்திரைக்காக அவர் ஐரோப்பா சென்றுள்ளார். அங்கிருந்து அவர் மன அமைதிக்காக ஐரோப்பாவிலுள்ள ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு 800கிமீ தூரம் நடந்தே சென்றுள்ளார்.
இதுபற்றி மலையாள திரையுலகினர் கூறுகையில், ‘இன்றைய இளம் நடிகர்கள் பிரித்விராஜ், பஹத் பாசில், துல்கர் சல்மான் ஆண்டுக்கு 4 படங்களில் நடிக்கிறார்கள். நல்லா சம்பாதிக்கிறார்கள். மோகன்லால் கூட அப்படித்தான் இருக்கிறார். ஆனால் அவரது மகனோ இதிலிருந்து மாறுபட்டு காணப்படுகிறார். அவருக்கு பணம் சம்பாதிக்கும் ஆசையெல்லாம் கிடையாது. மன அமைதி, சந்தோஷம் எங்கு கிடைக்குமோ அங்கு செல்ல விரும்புகிறார். வழக்கமாக வயதான பிறகுதான் இதுபோல் செய்வார்கள். ஆனால் பிரணவ்விடம் அதிக முதிர்ச்சி தென்படுகிறது’ என்றனர்.