முடக்கத்தான் கீரையில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளது. நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதில் பல ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். மூட்டு பிரச்சனைகள் முழுவதுமாகவும் நிரந்தரமாகவும் தீர இம்முடக்கத்தான் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்துள்ளனர்.
முடக்கத்தான் இலையை அரசர்கள் போரின் வெற்றி சின்னமாக தலையில் அணிந்தும் கொண்டாடி உள்ளனர். மருத்துவ குணம் பொருந்திய முடக்கு அறுத்தான் என்பது காலப்போக்கில் பேச்சு வழக்கில் மருவி முடகத்தான் என்று ஆனது.
இந்த கீரையை நம்முடைய அன்றாட உணவுகளோடு சேர்த்துக்கொண்டால் கை, கால், மூட்டு வலி போன்ற உடல் வலிகளில் இருந்து விடுதலை கிடைக்கும். மேலும் முதுகு எலும்பு தேய்மானம், பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், மூட்டுவாதம், மூட்டுவலிகளையும் குணப்படுத்தும்.
நமக்கு பிடித்த மாதிரியான உணவு பதார்த்தங்களை இக்கீரையில் செய்து சாப்பிடலாம். முடக்கத்தான் கீரை சூப் வைத்து அருந்தலாம். இதனால் சளி, தும்பலில் இருந்து விடுபடலாம். துவையல் மற்றும் தோசை செய்து சாப்பிடலாம். இப்பதிவில் முடக்கத்தான் கீரையின் நன்மைகள் மற்றும் தோசை எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

முடக்கத்தான் கீரையின் நன்மைகள்:
- கை, கால், மூட்டு சம்பந்தமான வலிகளை கட்டுப்படுத்தி நிரந்தர தீர்வாக அமையும்.
- மலச்சிக்கலுக்கும் மூலத்திற்கும் மிக சிறந்த மருந்தாக காணப்படுகிறது.
- முடக்கத்தான் கீரையின் இலைகளை சுத்தம் செய்து மைய அரைத்து அடிவயிற்றில் தடவி வந்தால் கர்ப்பகாலத்தில் கருப்பையில் இருக்கும் அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.
- மாதவிடாய் நாட்களில் வயிறு பிடிப்பு இருந்தால் முடக்கத்தான் இலையை தேங்காயெண்ணெயில் பொரித்து வயிற்றில் கட்டவும். ஓரு நாளைக்கு இரண்டு முறை செய்தால் வயிறு பிடிப்பு நிவாரணம் அளிக்கும்.
- விரைவீக்கத்தால் ஏற்படும் வலியை குறைக்கும்.
- இந்த கீரையை தொடர்ந்து உட்கொண்டால் விந்தணுக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும்.
- காய்ச்சல் மற்றும் சளி, இருமல் தொந்தரவிலிருந்து விடுதலை அளிக்கும்.
இப்படி ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ள முடக்கத்தான் கீரையை எப்படி தோசையோடு சேர்த்து ருசிக்கலாம் என்பது குறித்த எளிய செய்முறையை இங்கு பார்க்கலாம்.
இதையும் டிரைப்பன்னி பாருங்க: மருத்துவ குணம் நிறைந்த பிரண்டையில் தோசை செய்யும் முறை
முடக்கத்தான் கீரை தோசை செய்யத் தேவையான பொருட்கள்:
- முடக்கத்தான் கீரை – 2 கப்
- புழுங்கல் அரிசி – 1 கப்
- உளுந்து – 1 டீஸ்பூன்
- வெந்தயம் – 1 டீஸ்பூன்
- துவரம்பருப்பு – 2 டீஸ்பூன்
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- முதலில் அரிசி, உளுந்து, வெந்தயம், துவரம்பருப்பு ஆகிவற்றை ஒன்றாக சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் அரைக்கவும்.
- நன்கு சுத்தம் செய்து நறுக்கிய முடக்கத்தான் கீரையையும் சேர்த்து மென்மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவினை அரைக்கவும்.
- அரைத்த மாவினை 7 அல்லது 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- பிறகு, தோசை கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மாவு விட்டு, ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும்.
- தோசைக்கு வெங்காய சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும்.
- முறுவலாகவும் இந்த தோசை வரும் சைடிஷ் இல்லாமலும் சாப்பிடலாம் நன்றாக இருக்கும்.
இப்படி பல்வேறு நன்மைகளை அள்ளி தரும் முடக்கத்தான் கீரையில் நமக்கு பிடித்தமான உணவு வகைகளை சமைத்து சாப்பிட்டு உடல்நலத்தை பேணுவோம்.
இது போன்ற தகவல்களுக்கு மற்றும் ஆன்மீகம், ஜோதிடம், கல்வி, தமிழ் இலக்கியம், செய்திகள் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.