நயன்தாரா: லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா தமிழில் ‘ஐயா’ படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனது திறமையாலும், நடிப்பாலும் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்திருக்கிறார். தற்போது முதன்முறையாக அட்லீ இயக்கும் ‘ஜவான்’ படம் மூலம் இந்தியில் அறிமுகமாகியுள்ளார். கடந்த ஆண்டுதான் அவரது பலநாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அவருக்கு வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாரா பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது, ‘கல்லூரி சமயத்தில்தான் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். நல்ல நண்பர்களை தேர்வு செய்வதற்கும், வாழ்க்கையில் நமது பாதை சீராக செல்வதற்கும் கல்லூரிதான் உதவியானதாக இருக்கும். படிக்கும் சமயத்தில் அதில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். நண்பர்களுடன் ஜாலியாக நேரம் செலவழிக்கலாம்.
அதே நேரம் பெற்றோர் நமக்காக படும் கஷ்டங்களையும் மாணவர்கள் உணர வேண்டும். நமக்காக பாடும் படும் பெற்றோருக்காக தினமும் சில நிமிடங்களாவது செலவிடுங்கள். அவர்களிடம் உட்கார்ந்து பேசுங்கள். அவர்களுக்கு மரியாதை கொடுங்கள். கல்லூரி வாழ்க்கை முடிந்த பிறகு எத்தனை உயரத்துக்கு போனாலும் கஷ்டப்பட்ட காலங்களை மறந்து விடாதீர்கள். பணிவாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.’ என்று அவர் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.