பவன் கல்யாண்: முன்னணி தெலுங்கு நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண் ஜனசேனா என்ற கட்சியை நடத்தி வருகிறார். சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள இப்டம் என்ற கிராமத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக நிறைய வீடுகள் இடிக்கப்பட்டன. இதில் வீடுகளை இழந்த மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக பவன் கல்யாண் சென்றார். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் கார்களும், பைக்குகளும் புடைசூழ சினிமா படங்களில் வருவது போல காரின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்தார். இக்காட்சியை நேரில் பார்த்தவர்கள் ஏதோ ஷீட்டிங் நடக்கிறது என்று நினைத்தனர்.
பிறகுதான் அவர் வீடு இழந்த மக்களுக்கு ஆறுதல் சொல்ல செல்கிறார் என்று தெரிய வந்தது. அவர் காரின் மீது அமர்ந்து சென்ற போது அவரது ஆதரவாளர்கள் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றனர். மேலும் அவரது பாதுகாப்பாளர்கள் காரின் இரு புறங்களிலும் தொங்கியபடி சென்றுள்ளனர். அவர் வருகிறார் என்று தெரிந்து காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சாலை விதிகளை மீறுவதா கூறிய காவல் துறையினருக்கும் பவன் கல்யாணின் கட்சி தொண்டர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. பவன் கல்யாணின் இந்த செயல் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. போக்குவரத்து விதியை மீறியதாக அவர் மீது வழக்கு தொடரவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.