தென்கொரியா: இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியாகி இந்திய அளவில் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ எனும் நாட்டுக்கூத்து பாடல் மொழிகளையும், நாடுகளையும் தாண்டி பலரையும் கவர்ந்துள்ளது. இதனால் ‘கோல்டன் குளோப்’ விருதை வென்ற இப்பாடல் ஆஸ்கர் விருதுக்கான போட்டியிலும் இடம் பெற்றுள்ளது. பலரும் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள தென்கொரிய தூதரக ஊழியர்கள் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இந்தியாவுக்கான கொரிய தூதர் சங் ஜே போக் மற்றும் அந்நாட்டை சேர்ந்த தூதரக ஊழியர்கள் உற்சாகமாக துள்ளல் ஆட்டம் போடும் வீடியோவை தூதரகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.
நெட்டிசன்கள் பலரும் கொரிய தூதரக ஊழியர்களின் நடனத்தை பாராட்டி பதிவிட்டு வரும் நிலையில் பிரதமர் மோடியும் ‘உயிரோட்டமான, அற்புதமான குழு முயற்சி’ என தம்ஸ் அப் எமோஜியுடன் பாராட்டு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.