5ஜி சேவை: 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜீலையில் நடந்தது. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா, மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. ஏலத்தின் முடிவில் ரூ. 1,50,173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றைக்கான உரிமம் விற்பனை செய்யப்பட்டது. தொலைத் தொடர்பு துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோ நிறுவனம் அதிக அளவிலான அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து அக்டோபருக்குள் சில முக்கிய நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்படும் என்று ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார். இந்நிலையில், ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்காட்சியான ‘இந்திய கைப்பேசி மாநாடு’ டெல்லி பிரகதி மைதானத்தில் இன்று முதல் வரும் 4ம் தேதி வரை நடக்கிறது. ஒன்றிய தொலைத் தொடர்பு துறை மற்றும் இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இதை நடத்துகின்றன. இந்த மாநாட்டின் முதல் நாளான இன்று, 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 5ஜி அறிமுகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். ஜியோ நிறுவனம் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களுக்கு 5ஜி சேவையை கொண்டு வரும். மேலும் 2023க்குள் முழு நாட்டையும் இணைக்க திட்டமிட்டுள்ளது. 5ஜி என்பது அடுத்த தலைமுறைக்கான மொபைல் தொடர்பு நெட்வொர்க்குகள் ஆகும். இது 4ஜியை விட மிக வேகமான வேகம் மற்றும் பரந்த தொழில்நுட்ப பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகிறது. 5ஜி பல நிறுவன பயன்பாட்டு நிகழ்வுகளையும் கொண்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு 25 கோடியாக இருந்த இணைய இணைப்புகள் தற்போது 85 கோடியாக அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார். கிராமப்புறங்களிலும் தற்போது இணைய சேவைகள் அதிகரித்து வருகின்றன. புதிய மற்றும் பழைய பயனாளர்களின் இணைய பயன்பாட்டில் 5ஜி முக்கிய பங்கு வகிக்கும். 5ஜி சேவை இந்தியர்களுக்கு கிடைத்த பரிசு என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். ஏர்டெல் நிறுவனம் இன்று முதல் 8 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்க உள்ளது. அதைத் தொடர்ந்து வோடபோன், ஐடியா நிறுவனங்களும் விரைவில் 5ஜி சேவையை தொடங்க உள்ளன.