வி.ஏ.துரை: பிதாமகன், லூட்டி, கஜேந்திரா, என்னமா கண்ணு உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. இவர் பாலா இயக்கிய பிதாமகன் படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்த படத்தை தனக்கே இயக்கி தருமாறு பாலாவிடம் 25 லட்சம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் பாலா படமும் அவருக்கு இயக்கவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்காததால் துரை பாலாவின் அலுவலகத்தில் தர்ணா செய்துள்ளார். அப்போது பாலாவின் ஆட்கள் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். தற்போது அவர் வறுமையில் வாடுகிறார். அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு தன்னை பார்த்துக்கொள்ள கூட ஆளில்லாமல் நண்பர் ஒருவர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.
சமீபத்தில் துரையின் நண்பர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு அதனால் கால் எலும்பு தெரியும் அளவிற்கு புண்கள் ஏற்பட்டு கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும் நிலையில் உள்ளார் துரை என குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து நடிகர் சூர்யா, கருணாஸ் அவருக்கு நிதியுதவி செய்தனர். இந்நிலையில் துரையிடம் போனில் பேசிய ரஜினி, அவரது மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொள்வதாகவும் படப்பிடிப்பு முடிந்து சென்னைக்கு திரும்பிய பிறகு வந்து அவரை சந்திப்பதாகவும் கூறியுள்ளார். ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.