ஜெயிலர்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்-ரஜினிகாந்த் இணைந்துள்ள படம் ‘ஜெயிலர்’. ரஜினிகாந்தின் 169 வது படமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது.
சென்னை, எண்ணூர், ஹைதராபாத், கடலூர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது படக்குழுவினர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். தங்க நகரம் என்று அழைக்கப்படும் இங்கு படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஜெய்சல்மாரின் கோட்டையின் வெளிப்புறம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அங்கு ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு நடப்பதை அறிந்த ரசிகர்கள் கூட்டம் அந்த இடத்திற்கு வெளியே காத்துக்கொண்டிருந்தனர். காரில் வந்த ரஜனியை பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ரஜினியை காரில் இருந்து இறங்கும்படியும், அவருடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இருப்பினும் காரை விட்ட இறங்காத ரஜினிகாந்த் கார் கண்ணாடியை மட்டும் சிறிது இறக்கி ரசிகர்களை பார்த்து கையசைத்து சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.