ராஜுவ் காந்தி வழக்கு: ராஜுவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமிருந்த 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட நிலையில் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி உள்ளிட்ட எஞ்சிய 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இம்மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நளினி உள்ளிட்ட 6 பேரும் தாக்கல் செய்திருந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் ராஜுவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து அதிரடி உத்தரவிட்டனர்.
ராஜுவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட நிலையில் எஞ்சிய 6 பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் கைதான 7 பேரும் கடந்த 30 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வந்தனர். அவர்களது 30 வருட சிறைவாசம், நன்னடத்தை, பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை வைத்து உச்ச நீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142 வது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்தது. அதே அதிகாரத்தை கொண்டு நளினி உள்ளிட்ட எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வரலாற்றுப்பூர்வமான தீர்ப்பு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ’30 ஆண்டுகளுக்கு பிறகு 7 பேருக்கும் விமோசனம் பிறந்துள்ளது’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.