ராஷ்மிகா மந்தனா: எஸ்.ஆர். பிரகாஷ் பாபு , எஸ்.ஆர். பிரபு இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தனது அடுத்த தயாரிப்பு ‘ரெயின்போ’ திரைப்படத்தை அறிவித்துள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஃபேண்டஸி கலந்த படமாக இது உருவாகவுள்ளது. சாந்தரூபன் இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தில் தேவ் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவை கவனிக்கவுள்ளார்.
படத்தின் அறிமுக இயக்குனர் சாந்தரூபன் கூறுகையில், ‘இதுவரை இந்திய சினிமா பாத்திராத ஒரு காதல் ஃபேண்டஸி கதையாக ‘ரெயின்போ’ இருக்கும். ராஷ்மிகாவின் வேறொரு பரிமாண நடிப்பை நீங்கள் திரையில் பார்ப்பீர்கள். புதுமையான கதைக்களம் கண்டிப்பாக படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் ஆச்சரியப்படுத்தும்’ என்று அவர் கூறியுள்ளார்.
நடிகை ராஷ்மிகா கூறுகையில்,’ஒரு பெண் கதாபாத்திரத்தின் பார்வையில் சொல்லப்படும் கதையில் முதல் முறையாக பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்துக்கு திரையில் உயிர் கொடுக்க ஆவலாக இருக்கிறேன். உங்களை பொழுதுபோக்கும், ஆச்சரியப்படுத்தும் ஒரு படமாக ரெயின்போ இருக்கும். அந்த பெண் கதாபாத்திரதுடனான ரசிகர்களின் பயணம் உற்சாகமானதாக இருக்கப்போகிறது. அதற்கு தயாராகுங்கள்’ என்று அவர் கூறியுள்ளார். நேற்று பூஜையுடன் தொடக்க விழா நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு ஏப்ரல் 7 முதல் ஆரம்பமாகிறது.