அரியானா மாநிலம்: அரியானா மாநிலம் ரோடக் மாவட்டத்தில் உள்ளது சித்தி கிராமம். இங்கு கடந்த 12ம் தேதி பஞ்சாயத்து தலைவர் தேர்தல் நடந்தது. இதில் இதே கிராமத்தை சேர்ந்த தரம்பால் தலால் அகாகலாவும், நவீன் தலாவும் போட்டியிட்டனர். இதில் தரம்பால் 66 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதனால் இந்த கிராமம் மிகவும் பதற்றமானது. தரம்பால் தோல்வி அடைந்ததால் கிராமத்தில் மோதல் வந்துவிடக் கூடாது என கிராம மக்கள் நினைத்தனர். அவரை சமாதானப்படுத்தும் வகையில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவருக்கு 2கோடியே 11 லட்சம் ரொக்கமும், பெரிய கார் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளனர். இதனால் தரம்பால் மிகவும் நெகிழ்ந்து போனார்.
இது பற்றி அவர் கூறுகையில், ‘கடந்த 2000ம் ஆண்டில் இந்த பஞ்சாயத்து தலைவராக நான் இருந்த போது பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நான் மேற்கொண்டேன். தேர்தலில் தோல்வி அடைந்ததால் மிகவும் மனம் உடைந்தேன். ஆனால் என் கிராம மக்கள் எனக்கு ஆறுதல் கூறி 2 கோடியே 11 லட்சம் ரொக்கமும் ஒரு காரும் எனக்கு பரிசளித்து தங்களின் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.