பொள்ளாச்சி. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் வனத்துறையினரால் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. வனத்திற்கும், வனத்துறையின் பல்வேறு பணிகளுக்கும் உதவியாக இருந்துவரும் யானைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் யானை பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு யானை பொங்கல் விழாவுக்காக கோழி கமுத்தி யானைகள் முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவிற்காக யானைகளுக்கு குளிப்பாட்டி, பொட்டிட்டு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதையடுத்து மலைவாழ் மக்கள் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்தனர். பின்னர் யானைகளுக்கு பிடித்த உணவான கரும்பு, வாழை, ராகி, கொள்ளு, அரிசி சாதம் போன்ற சத்தான உணவுகள் யானைகளுக்கு வழங்கப்பட்டது. இந்த யானைகள் பொங்கல் விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். வழக்கமாக தமிழர்கள் பூப்பொங்கல், மாட்டுப் பொங்கல் கொண்டாடும் நிலையில் யானைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் இந்த விழாவில் கலந்து கொள்வது புது அனுபவம் என சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.
மேலும் ஒரே இடத்தில் 20க்கும் மேற்பட்ட யானைகளை பார்ப்பது பரவசமளிப்பதாகவும், இயற்கையையும், வனத்தையும் பாதுகாக்கும் யானைகளை கெளரவிக்கும் விதமாக வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவில் குடும்பத்துடன் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.