சுஷ்மிதா சென். முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென் சமீபகாலமாக சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு வெப் தொடர்களில் அதிகமாக நடித்து வருகிறார். இவர் தமிழில் நாகார்ஜூனாவுடன் இணைந்து ரட்சகன் படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு பாலிவுட்டில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். தற்போது வெப் தொடர்களில் தன் கவனத்தை அதிகமாக செலுத்தி வருகிறார். அதைத் தொடர்ந்து தற்போது அவர் ‘தாஹ்லி’ என்ற வெப் தொடரில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மும்பையில் வசிக்கும் சமூக ஆர்வலரும், திருநங்கைகளுக்காக குரல் கொடுத்து வருபவருமான சவுரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த தொடர் உருவாகி வருகிறது. இதை தேசிய விருது பெற்ற இயக்குனர் ரவி ஜாதவ் இயக்குகிறார்.
திருநங்கையாக நடிப்பது குறித்து சுஷ்மிதா சென் கூறும்போது, ‘இந்த அழகான பெண்ணின் கதாபாத்திரம் மற்றும் அவரது கதையை உலகிற்கு கொண்டு வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை பெரும் பாக்கியமாக, பெருமையாக கருதுகிறேன். கண்ணியத்துடன் வாழ்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு’ என்று அவர் கூறியிருக்கிறார். சுஷ்மிதாவின் திருநங்கை தோற்றம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இருப்பினும் இந்த கேரக்டரில் ஒரு நிஜமான திருநங்கையை நடிக்க வைத்திருக்கலாமே என்றும் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு சுஷ்மிதா சென் தேர்ந்த நடிகை என்பதால் அவர் சவுரி சாவந்த் கேரக்டரில் நடித்துள்ளார் என்றும், அவரை தவிர படத்தில் ஏராளமான திருநங்கைகளுக்கு நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் தயாரிப்பு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.