டி.ராஜேந்தர்: ‘வந்தே வந்தேமாதரம், வாழிய நமது பாரதம்’ என்ற பான் இந்தியா பாடலின் மூலம் தனது பேரன் மாஸ்டர் ஜேசனுடன் இணைந்து டி.ராஜேந்தர் எழுதி இசையமைத்து ஒளிப்பதிவு செய்து நடித்து தமிழ் மற்றும் இந்தியில் பாடியுள்ள தேசபக்தி ஆல்பத்தை டி.ஆர் ரெக்கார்ட்ஸ் வெளியிட்டுள்ளது. இது குறித்து டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
‘ஒரு தலை ராகம்’ தொடங்கி ‘வீராசாமி’ வரை நான் இயக்கிய படங்களில் இடம் பெற்ற பல பாடல்கள் இசையுலகில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளன. ‘கிளிஞ்சல்கள்’ படத்துக்காக பிளாட்டினம் டிஸ்க் வாங்கினேன். ‘பூக்களை பறிக்காதீர்கள்’, ‘பூ…பூவா பூத்திருக்கு’, ‘பூக்கள் விடும் தூது’, ‘கூலிக்காரன்’ போன்ற படங்களில் எனது இசையில் இடம் பெற்ற பல பாடல்கள் ரெக்கார்ட் பிரேக் செய்துள்ளன.
தற்போது டிஆர் ரெக்கார்ட் சார்பில் பான் இந்தியா ஆல்பத்தை வெளியிட்டுள்ளேன். முதன்முதலாக ‘வந்தே வந்தேமாதரம், வாழிய நம் பாரதம்’ என்ற பாடலை அகில இந்திய கான்செப்டில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாக்கியுள்ளேன். உஷா ராஜேந்தர், ஆர்ஆர் மூவிஸ் ரமேஷ், கின்னஸ் பாபு கணேஷ் ஆகியோர் இதில் இணைந்து பணியாற்றியுள்ளனர். தொடர்ந்து பான் இந்தியா படம் ஒன்று இயக்குகிறேன். அதுபற்றி விரைவில் அறிவிப்பேன் என்று கூறினார்.