விரைவில் உலக தமிழ் மாநாடு நடத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 12வது உலக தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்தவும் முடிவு செய்திருப்பதாக தகவல். இறுதியாக 11வது தமிழ் மாநாடு சிக்காகோவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
”கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு தோன்றிய மூத்தக்குடி” என தமிழ் ஆர்வலர்கள் மார்தட்டிக் கொள்ளும் அளவிற்கு உயர்ந்த மொழி தமிழ்குடி. அந்த தமிழ் மொழியில் எண்ணற்ற இலக்கண இலக்கியங்கள் தோன்றி காலம் கடந்தும் பல மொழிகள் இன்று இல்லாமல் இருக்கையில் செம்மாந்த நடையுடன் தமிழ் நிலைத்து நிற்பதற்கு பல இலக்கியங்களே காரணம்.
அதுமட்டும் அன்றி காலத்திற்கு ஏற்ப பல தரவுகளை தமிழ் மொழி பெற்று கணிணியில் பயணிக்கும் இக்காலச் சூழலில் சிறப்பாக பயணிக்கிறது தமிழ் மொழி என்றால் மிகையாகாது.
தமிழ் மொழியின் சிறப்பையும் தமிழ் மக்களின் உணர்வையும் பறைச் சாற்றுவனவாக உருவாக்கப்பட்டதே உலக தமிழ் மாநாடு. இம்மாநாடு மூலம் உலகத்தில் எந்த மூலையில் தமிழ் மக்கள் கூடியிருந்தாலும் உணர்வாலும் மொழியாலும் ஓன்றுபட்டு ஓற்றுமையுடன் உலக தமிழ் மாநாட்டில் பங்கு பெற வேண்டும் என்பதற்காக தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்.

உலகத் தமிழறிஞர்களை ஒன்று சேர்த்து அனைவரது ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் நோக்கத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் முடிவு செய்தது.
இந்த நிலையில் திருச்சி துவரம்குறிச்சி, முஸ்லிம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த நரம்பியல் டாக்டர் எம்.ஏ.அலீம், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறைக்கு கடந்த ஏப்ரல் 1-ந்தேதி மனு அளித்திருந்தார். அதில், 12-வது உலகத் தமிழ்ச் சங்க மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும். அதற்கு அரசு ஒப்புக்கொள்ளுமா? என்று கேட்டிருந்தார்.
அந்த மனுவுக்கு தற்போது தமிழ் வளர்ச்சி இயக்குனர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், திருச்சியில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவதென்பது அரசின் கொள்கை முடிவாகும் என்றும் அதன் மூலம் மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த உலகத் தமிழ் மாநாடு திருச்சியில் நடைபெறும் என்பது உறுதியாகி இருக்கிறது. அந்த மாநாடு நடைபெறும் தேதியை அரசு பின்னர் அறிவிக்கும்.