முதல்வரின் காலை உணவு திட்டத்திற்கு 33.56 கோடி ஓதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
1545 அரசுப்பள்ளிகளில் 1.14 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக தொடங்க 33.56 கோடி ஓதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கொரோனா பொது முடக்கத்தால் மாணவர்களின் கற்றல் இடைவெளி அதிகரித்ததையும் அதனால் ஏற்பட்ட இழப்புகள் குறித்த தரவுகளையும் பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் சுட்டிக் காட்டி வருகின்றன. ஆன்லைன் கல்வி முறையின் பள்ளிக் குழந்தைகள் போதிய அறிவைப் பெறவில்லை என்றும், இந்த கல்வி இழப்புகளை உடனடியாக சரி செய்யாவிட்டால், எதிர்கால இந்தியா 400 பில்லியன் அமெரிக்க டாலர் இழக்க நேரிடும் என்றும் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, மிகத் தீவிரமாய் இருக்கும் பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் இந்த பாதிப்பை மேலும் சிக்கலாக்குகின்றன. ஏழை மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாணாக்கர்கள் குறிப்பாக மாணவிகள் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே, சராசரியாக அரசுப் பள்ளிகளில் நுழையும் போது நான்கில் ஒரு மாணவர் வளர்ச்சி குறைபாடு கொண்டவராகவும், 2ல் ஒரு மாணவர் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவராக உள்ளார். சுவர் இருந்தால் சித்தரம் என்பதற்கு இணங்க, மாணவர்களின் உடல்நலத்தையும், கல்வி திறனையும் ஒருங்கே மேம்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள் எண்ணறிவு, எழுத்தறிவு பெறுவதில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
அந்த வகையில், தமிழக அரசு காலைச் சிற்றூண்டி திட்டம் மாணவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. பொதுவாக, காலை சிற்றுண்டி மூளையின் அறிவார்ந்த செயல்களை அதிகப்படுத்தும் என்றும் தரவுகள் கூறுகின்றன. இதனை கருத்தில் கொண்டு இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது.